Home Tags ரிஷப ராசி குணங்கள்

Tag: ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி பொது பலன்கள் – ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவர். ரிஷப ராசியில் கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதங்களும், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்களும் அடங்கியுள்ளன. ராசிகளில், ரிஷப ராசி ஸ்திர ராசியாகும். குருவுக்கு அடுத்தபடியாக முழு சுப கிரகம் சுக்கிரன் ஆகும். சகல கலைகளுக்கும் அழகுக்கும் அதிபதியான சுக்கிரன் இந்த ராசியின் அதிபதியாக வருவதால், இந்த ராசிக்காரர்கள் முக அழகுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ரிஷப ராசி ஒரு பெண் ராசியாகும். இது நீரின் தத்துவத்தை கொண்டதாகையால் சீதள சுபாவம் இருக்கும். ரிஷப ராசிக்கு கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். மற்றவை பகை ராசிகளாகும்.

ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தும் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்கள் மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். இவர்களுக்கு நீண்ட கழுத்தும், அகன்ற மார்பும், விரிந்த தோள்களும், அழகான அங்க அமைப்புகளும் இருக்கும். இவர்களின் கண்களுக்கு தனி அழகுண்டு. பற்கள் வரிசையாகவும் அழகாகவும் இருக்கும். குட்டையான விரிந்த மூக்கும் அழகான அடர்ந்த முடியும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் புகழ், கௌரவம், அந்தஸ்து யாவும் அமையும்.

இவர்கள் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருப்பார்கள். இவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலைத் தரும். பொதுக் காரியங்களிலும் இவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். அதேபோல், எந்த ஒரு பொது விஷயத்திலும் வந்தோம் போனோம் என்று இல்லாமல், எல்லா வேலைகளையும் முன் நின்று செய்வார்கள். எந்த விஷயத்திலும் தனக்கென காரியம் சாதிக்க நினைப்பது இவர்களுக்கு பிடிக்காது. உடன் இருப்பவர்களுடன் சேர்ந்து முன்னேறுவதே முன்னேற்றம் என்பது இவர்களின் சித்தாந்தமாக இருக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், கவர்ச்சியாகவும் பேசும் ஆற்றல் கொண்டவர்கள். முன் பின் பழக்கமில்லாத புதிய நண்பர்களுடனும், விருந்தாளிகளுடனும், புதிதாக பழக்க மேற்படுத்திக் கொள்வதில் சற்று சங்கடப் படுவார்கள். வார்த்தைகளை அளந்து பேசும் இவர்களின் பேச்சில் உறுதி காணப்பட்டாலும் பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசி பிறர் தம் பேச்சை வெல்ல இடம் தராமல் பேச்சில் தனக்கென ஒரு தனி பாணியை வைத்திருப்பார்கள்.

ரிஷப ராசிக்கு 3-வது ஸ்தானமான முயற்சி ஸ்தானத்துக்கு அதிபதி சந்திரன் என்பதால், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்றபடி எதையும் முயற்சி செய்து முடித்துக் காட்டுவார்கள். சகோதரர்களிடம் அதிகம் பாசம், அக்கறை இருக்கும். பெற்ற தாயிடம் எல்லோருக்கும் பாசம் இருக்கும், ஆனால் இவர்களுக்கோ அதையும் தாண்டி அவரிடத்தில் பெரும் பக்தி இருக்கும். தாய்க்கு எதாவது ஒன்று என்றால், துடித்து போய்விடுவார்கள். தாயார் ஸ்தானத்தைக் குறிக்கும் சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக இருப்பதால், உலகத்துக்கே ஒளி தரும் சூரியனைப் போல், உற்றார், உறவினர் எல்லோரையும் நேசிப்பார்கள்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இவர்களுக்குப் பொருந்தும். எவருக்கும் எளிதில் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆடம்பரமாக இல்லா விட்டாலும் சுத்தமான உடைகளை உடுத்தவே ஆசைப்படுவார்கள். வெண்மை நிறம் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குதர்க்கமாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவார்கள்.

ரிஷப ராசிகாரர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். கலைத்துறை, மற்றும் இசைத்துறையில் நாட்டம் அதிகம் இருக்கும். இவர்கள் மத்திய வயதில் தான் சுக போகமான வாழ்வு அமையும். எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புத் தன்மையும் கூட இவர்களிடத்தில் அதிகமிருக்கும்.

இவர்களுக்கு பகைவர்களே இருக்க மாட்டார்கள். அதற்காக, எதிரிகளே நமக்கு இல்லை என்றும் சந்தோஷம் அடையவும் முடியாது. காரணம், இவர்களுக்கு எதிரி இவர்களுக்கு உள்ளேயே இருப்பான். ஆமாம், இவர்களை பொறுத்தவரை இவர்களின் எதிரி இவர்களேதான். இவர்களின் பேச்சு, செயல் அனைத்துக்கும் இவர்களே எதிர்பாராதபடி ஒரு பக்க விளைவை ஏற்படுத்தும். ஆகவே, பேசும்போதும் செயல்படும்போதும் கனிவும், அதீத கவனமும் தேவை.

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் நல்ல ஞாபக சக்தி கொண்டவர்கள். தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள். ஆதலால் எதற்கும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். பிறருக்கு உதவி செய்வதிலும் தன்னலம் இல்லாமல் செயல்படுவார்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகம் கொண்டவர்கள். பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்.

இவர்களின் வாழ்க்கைத் துணை இவர்களைவிட வேகமாக இருப்பார். நிர்வாகத் திறமையில் அதீத திறமையுடன் திகழ்வார். அதேநேரம், சில விஷயங்களில் இவர்களை புரிந்து கொள்ளாமல் வாக்குவாதங்கள் செய்வார். அவர் எதைச் செய்தாலும் இவர்களின் நன்மைக்காகவே இருக்கும். இவர்கள் சிறு வயதில் தகுந்த அனுபவம் இல்லாமல் சில தொழில்களில் ஈடுபட்டு, நஷ்டத்தை அடைவார்கள். ஆனாலும் அதன் மூலம் கிடைத்த அனுபவம் இவர்களுக்கு உதவியாக இருக்கும். இவர்களின் நாற்பது வயதுக்கு மேல் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.

ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

ரிஷபம் என்பது நந்தியை குறிப்பதால், பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் ஈசனை தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், இவர்களின் வாழ்க்கை வளம் பெறும். நந்தியெம்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்த திருவையாறு திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று அருள்மிகு ஐயாறப்பரையும் அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்து, வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் சகல இன்னல்களும் நீங்கும்.

அதேபோன்று தொழிலில் பின்னடைவு, குடும்பத்தில் பிரச்னை, வேலையில் சச்சரவுகள் என்று மனதுக்கு வருத்தம் ஏற்படுத்தும் சுழல்கள் ஏற்பட்டால் பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப்பழம் கொடுத்து வாருங்கள். பிரச்னைகள் விலகும். உங்கள் வாழ்க்கையில் சகல இன்னல்களும் நீங்கும்.