ஜாதக யோகங்கள் :
யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது கெடு பலனையும் தரலாம். சமுகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர் முதல், அன்றாட பிழைப்புக்கே கஷ்டப்படும் சாமானியர் வரை அவரவர் ஜாதகத்தில் அமைந்துள்ள யோகங்களால் தான் அந்த நிலையை அடைய முடியும்.
யோகம் என்பது நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் அனுபவிக்கும் இன்பமாகும். தோஷம் என்பது நாம் முன் ஜென்மத்தில் செய்த தீய வினைகளால் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பமாகும். யோகங்கள் என்பது நாம் பிறக்கும்போதே நாம் பிறந்த நேரத்தை வைத்து கிரகங்கள் இருக்கும் நிலையை குறிப்பதாகும். அந்த வகையில் பலவிதமான ஜாதக யோகங்கள் மற்றும் தோஷங்கள் ஒருவரின் ஜாதகத்தில் கலந்து இருக்கும். நாம் இந்த பகுதியில் ஒரு சில யோகங்களையும் அதனால் உண்டாகும் பலன்களையும் பார்ப்போம்.
ருசக யோகம் :
செவ்வாய் தனது வீட்களான மேஷம் மற்றும் விருச்சகத்தில் ஆட்சி பெற்றாலோ அல்லது மகரத்தில் உச்சம் அடைந்தாலோ கேந்திர ஸ்தானங்களில் நின்றாலோ அது ருசக யோகம் என்று அழைக்கப்படுகிறது.
ருசக யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இந்த யோகம் கொண்டவர்கள் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றி கொள்வார்கள். செல்வ செழிப்புகள் கொண்ட செல்வந்த வாழ்வு வாழ்வார்கள். நல்ல பண்புள்ள உறுதியான உடல் அமைப்பை கொண்டவராக இருப்பார்கள். தன்னை பற்றி எப்போதும் உயர்வாக எண்ணக் கூடியவர்கள்.
பத்ர யோகம் :
புதன் தனது வீடான மிதுனம் மற்றும் கன்னியில் இருந்தாலோ அல்லது உச்ச வீடான கன்னியிலும் கேந்திர இடங்களில் நின்றாலோ அது பத்ர யோகம் என்று அழைக்கப்படுகிறது.
பத்ர யோகத்தால் உண்டாகும் நன்மைகள்:
இந்த யோகம் கொண்டவர்களின் ஆயுள் பலம் அதிகம். கணிதம் மற்றும் கலைகளில் நன்றாக தேர்ச்சி அடைவார்கள். சகல ஐஸ்வர்யங்களுடன் அதிகாரம் உடைய எல்லோராலும் விரும்பக்கூடிய அரசனை போன்ற வாழ்வு வாழ்வார்கள்.
அம்ச யோகம் :
சுப கிரகமான குரு தனது வீடான தனுசு மற்றும் மீனத்தில் இருந்தாலோ அல்லது உச்ச வீடான கடகத்தில் நின்று அது கேந்திரமான இடங்களில் நின்றால் அம்ச யோகம் உண்டாகிறது.
அம்ச யோகத்தால் கிடைக்கும் பலன்கள் :
இவர்கள் பெருந்தன்மை கொண்ட அனைவருக்கும் கொடுக்கும் கொடை வள்ளலாக இருப்பார்கள். நல்ல வசீகரம் கொண்ட இலட்சணமான முக அமைப்பு கொண்டவராக இருப்பார். எல்லாவிதமான செல்வங்களும் பெற்றிருப்பார்கள்.
மாளவ யோகம் :
சுக்கிரன் தன் வீடான ரிஷபம் மற்றும் துலாமில் ஆட்சியோ அல்லது மீனத்தில் உச்சமாகி இருந்து அது லக்கினத்திற்கு கேந்திரம் ஏறினால் அது மாளவ யோகம் எனப்படும்.
மாளவ யோகத்தில் உண்டாகும் பயன்கள் :
இவர்கள் செல்வ செழிப்புடன் வாழக்கூடிய செல்வந்தர்கள் ஆவார்கள். எதிலும் அஞ்சா நெஞ்சுடன் தைரியத்துடன் செயல்படுவார்கள். நல்ல இல்லத்துணை அமைய பெற்று அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க கூடியவர்கள்.
ஸல யோகம் :
சனி தன் வீடான மகரம் மற்றும் கும்பத்தில் ஆட்சியோ அல்லது துலாமில் உச்சமான இடத்தில் நின்று அது கேந்திரமடைந்தால் ஸல யோகம் உண்டாகிறது.
ஸல யோகத்தின் பயன்கள் :
இந்த யோகம் கொண்டவர்களுக்கு அதிகாரமுள்ள பணிகள் அமையும். ஒரு நிறுவனத்தை தொடங்கி பல பேருக்கு வேலை கொடுக்கும் நிலையில் இருப்பார்கள்.
தர்மகர்மாதி யோகம் :
10க்கு உடைய கர்மத்ஸ்தானம், 9க்கு உடைய பாக்கியத் ஸ்தானம் நல்ல கேந்திர ஸ்தானங்களில் நின்றால் அது தர்மகர்மாதி யோகம் எனப்படும்.
தர்மகர்மாதி யோகத்தில் உண்டாகும் பயன்கள் :
இந்த யோகம் கொண்டவர்களின் செல்வாக்கு பெருகும். சௌபாக்கியம் உண்டாகும். ஐஸ்வர்யம் கிட்டும். எதிர்பார்த்த இடங்களில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் உண்டாகும்.
விரிஞ்சி (விரின்சி) யோகம் :
லக்னாதிபதி, சனி மற்றும் குரு இந்த மூவரில் யாராவது ஒருவர் ஆட்சியோ அல்லது உச்சமோ அடைந்து அது கேந்திரமானால் விரிஞ்சி யோகம் உண்டாகிறது.
விரிஞ்சி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
வேத ஞானம் கொண்டவர்களாக திகழ்வார்கள். சாஸ்திர சம்பிரதாயங்கள் அறிந்து தீர்க்க ஆயுளுடனும், குடும்ப வாரிசுகளுடனும் வாழ்வார். அரசு சார்ந்த சன்மானங்கள் கிடைக்கப் பெறுவார்கள். நல்ல தெய்வ விசுவாசியாகவும், தெய்வ பக்தியுடனும் வாழக்கூடியவர்கள்.
அஷ்ட லட்சுமி யோகம் :
ராகு 6-ல் நிற்க கேது 12-ல் நிற்க குரு கேந்திரமான இடத்தில் இருந்தால் அது அஷ்ட லட்சுமி யோகம் எனப்படும்.
அஷ்ட லட்சுமி யோகத்தின் பலன்கள் :
சகல சம்பத்துகளும் கிட்டும். சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று சுக போக வாழ்க்கை வாழ்வார்கள். ராகு திசையில் ஜாதகர் மிகுந்த செல்வம் உடையவராக விளங்குவார்.
குருமங்கள யோகம் :
குருவும் செவ்வாயும் மீனம், தனுசு, மகரம், மேஷம், விருச்சகம் மற்றும் கடகம் போன்ற இராசிகளில் இணைந்து நின்று அது கேந்திரமடைந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது.
குருமங்கள யோகத்தின் பலன்கள் :
இவர்களின் அதிகாரம் மற்றும் அந்தஸ்து உயரும். கீர்த்திக்கு உடையவர்கள் ஆவார்கள்.
சமத்துவ யோகம் :
லக்னத்திற்கு பூர்வ புண்ணியமான 5ம் அதிபதியும் பாக்கியாதிபதியும் 9ம் மற்றும் 10ம் அதிபதிகள் கர்மாதிபதியும் ஒரே இடத்தில் கூடிட அதுவும் லாப கேந்திர வீடாக இருந்தால் சமத்துவ யோகம் உண்டாகிறது.
சமத்துவ யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இந்த யோகம் அமைந்தவர்களின் அனைத்து செல்வங்களையும் அளித்திடும். சொல் அதிகாரம் உள்ள பதவிகள் உண்டாகும். அதுமட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, வீடு, நிலம் மற்றும் அலங்கார பொருள்கள் அனைத்தையும் அடைவார்கள்.
பிருகு மங்கள யோகம் :
மங்களகாரகரான செவ்வாயும், களத்திரகாரகரான சுக்கிரனும் ஆட்சி, உச்சம், நட்பு மற்றும் கேந்திரம், கோணம் இவைகளில் கூடி நின்றால் பிருகு மங்கள யோகம் உண்டாகிறது.
பிருகு மங்கள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இவர்களுக்கு மனை மூலம் லாபம் உண்டாகும். வாகன வசதிகள் அமையும். நல்ல நண்பர்கள் அமைவார்கள்.
கலாநிதி யோகம் :
குரு 2 அல்லது 5 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெறின் கலாநிதி யோகம் அமைகிறது.
கலாநிதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
நல்ல பதவி, அந்தஸ்து மற்றும் அதிகாரம் கிடைக்கும். தனம், ஐஸ்வர்யம் மற்றும் புகழ் கிட்டும். ஆயுள் பலத்துடன் நல்ல இல்லறமும், சந்தான பாக்கியமும் பெற்று சகல சீரும் சிறப்புடனும் வாழ்வார்கள். அரசாளும் யோகம் பெறுகிறார்கள், செல்வம் செல்வாக்கு அமைகிறது.
முக்தி யோகம் :
லக்னத்தில் 12 ல் கேது அமையப் பெற்றவர்களுக்கு முக்தி யோகம் உண்டாகிறது.
முக்தி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இந்த யோகம் அமைந்தவர்களுக்கு இறந்த பிறகு மீண்டும் மற்றொரு பிறவி ஏற்படுவதில்லை. இருக்கும் காலத்தில் சந்நியாசி வாழ்கையில் நாட்டம் ஏற்படும். பக்தி மார்கத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பார்கள்.
பாரிஜாத யோகம் :
11 ஆம் அதிபதி ஆட்சி/உச்சம் பெற்றிருந்தால் பாரிஜாத யோகம் உண்டாகிறது.
பாரிஜாத யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
நற்குணம் மிக்கவர், செல்வம் செல்வாக்கு பெற்று விளங்குவார்கள்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.