காலை உணவை தவிர்க்கும் இல்லத்தரசிகளா நீங்கள் ?
பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் நிற்க நேரம் இல்லாமல் நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருகிறோம். குடும்பத்தின் ஆணி வேராக இருப்பது குடும்பத் தலைவி தான். என்னதான் கணவன் பணம் சம்பாரித்து கொடுத்தாலும் அங்கு பொறுப்புடன் செயல்பட்டு கணவன், குழந்தைகள் என அனைவரையும் அரவணைத்து குடும்பத்தை சரியான பாதையில் வழிநடத்துவது நம் இல்லத்தரசிகள் தான் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
இத்தனை பொறுப்புகளையும் தன் தோளில் தூக்கி சுமக்கும் பெண்கள் முதலில் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதே இல்லை. அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்வதே இல்லை.
தினமும் சுறுசுறுப்பாக ஓடிஆடி வேலை செய்ய உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பது காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான். பெரும்பாலான பெண்கள் காலை உணவை ஒரு காபியோடு முடித்துக் கொள்கிறார்கள்.
கணவர், குழந்தைகள் சாப்பிடுவதை கண்காணிக்கும் பெண்கள் தாங்களும் நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதில்லை. வீட்டில் இருக்கும் அனைவரையும் கவனித்து விட்டு வீட்டு வேலைகள் எல்லாவற்றயும் செய்து விட்டு பசியுணர்வு ஏற்பட்டும் அதை பொருட்படுத்தாமல் நேரம் தவறி தாமதமாக சாப்பிடுவது மிகவும் தவறான ஒன்றாகும். ஆனால் பெண்கள் காலை உணவு சரியான நேரத்திற்கு சாப்பிடுவது மிக முக்கியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மனைவி, கணவன், குழந்தைகள் , பெரியவர்கள் என யாராக இருந்தாலும் எந்த அவசர வேலையாக இருந்தாலும் காலை உணவை கட்டாயம் தவிர்க்கக் கூடாது. காலை உணவை தவிர்ப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்பதை நம்மில் பலரும் தெரிந்து கொள்வதே இல்லை.
பல இல்லத்தரசிகள் காலை உணவில் அலட்சியமாகத்தான் இருக்கிறார்கள். அறிவியல் ரீதியாக எடுத்துக்கொண்டால் காலை உணவில் வைட்டமின், மினரல்ஸ், கார்ப்போ ஹைட்ரேட்ஸ் கிடைக்கும். தினமும் காலையில் எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட்டுவிட வேண்டும்.
நாம் இரவு உணவை சாப்பிட்டு குறைந்தது எட்டு மணி நேரத்திற்கு பிறகு தான் நாம் காலை உணவை சாப்பிடுகிறோம். அந்த காலை உணவை நாம் தவிர்ப்பதால் இரைப்பையில் அதிகப்படியான அமில சுரப்பு ஏற்படும்.
இதனால் வயிற்றுப் புண், வயிற்று உப்புசம், தீவிரமான வயிற்றுவலி, வாந்தி, பசியின்மை, அதிக உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம் வரை பல நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்குச் சாப்பிட்டால் ட்ரான்ஸ்பேட் கொழுப்பும், கலோரியும் அதிகரிக்கும். இந்த கொழுப்பு அடிவயிற்றில் படிந்து நாளைடைவில் தொப்பையாக மாறிவிடும்.
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
- காலை உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் இரைப்பை காலியாக இருக்கும். இதனால் இரவில் இயல்பாக சுரந்துள்ள பித்தநீர் மெல்ல தலைக்கு ஏறும் அபாயம் உள்ளது. இதனால் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாந்தி போன்றவை ஏற்படும்.
- வயிற்றில் ஏற்படும் புண் (stomach ulcer), வயிற்று உப்புசம் (gastritis) என்று கூறப்படும் தீராத வலி மற்றும் வாந்தி, மயக்கம், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவை காலை உணவு சாப்பிடாததால் ஏற்படுகிறது.
- உடலுக்கு தேவையான கலோரிகள் குறைந்து சோர்வு ஏற்படும், மேலும் உடலின் கலோரியும் குறைவதோடு உடலின் வளர்சிதை மாற்றத்தில் சிதைவை ஏற்படுத்தும்.
- காலை உணவை எடுத்து கொள்ளாவிட்டாலும் இயல்பாக சுரக்கும் ஜீரணிக்கும் அமிலம் சுரந்து கொண்டேதான் இருக்கும்.
- காலை உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் இந்த அமிலங்கள் செரிமானம் செய்ய உணவு இல்லாததால் குடலை அரிக்க தொடங்கி விடும். இதனால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.
- மேலும் காலை உணவு சாப்பிடாதவர்கள் மதிய உணவையும் திருப்தியாக சாப்பிட முடியாது. குடல் சுருங்கி கொஞ்சம் சாப்பிட்டவுடனே வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படும்
- சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக காலை உணவை சாப்பிட வேண்டும். காலை உணவை தவிர்த்தால் மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு அதனால் வேறு சில பிரச்னைகள் தோன்றி கடைசியில் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.
- நாம் சாப்பிடும் உணவை அவசர அவசரமாக விழுங்கி விடக் கூடாது. ஒவ்வொரு வேளையும் நாம் சாப்பிடும் உணவை குறைந்தபட்சம் 10-20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
- தினமும் நாம் சாப்பிடும் உணவில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், மீன் உணவுகள், முட்டை போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது.
- காலை உணவை தவிர்ப்பதால் அன்றாடம் உடல் உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய சத்து கிடைக்காமல் சத்து குறைபாடு ஏற்படும் செல்களுக்கு சத்து குறைபாடு ஏற்படும் போது சோர்வு அடைதல், முடி உதிர்வு ஏற்படும்.
- மன அழுத்தம் ஏற்படும், சிறு சிறு விஷயங்களுக்கு கூட கோபம் வரும்.
- பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொடங்கிக் கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என பலரும் இன்றைக்குத் தவிர்க்கக்கூடிய ஒரு விஷயமாக இருப்பது “காலை உணவு”.
- காலை வேளையில் ராஜாவை போல சாப்பிடணும், மதியம் மந்திரி மாதிரி சாப்பிடணும், இரவில் பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடணும். அதாவது காலையில் வயிறு நிறைய, மதியம் அறை வயிறு, இரவு கால் வயிறு உணவு. இப்படி தான் சாப்பிட வேண்டும்.