ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு
மீன் குழம்பு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. மீன் குழம்பு என்றாலே காரமானதாகத்தான் இருக்கும். அதிலும் ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு என்றால் நல்ல சுவையாக காரசாரமாக இருக்கும். வாங்க ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மீன் – 1/2 கிலோ
- பெரிய வெங்காயம் – 4
- இஞ்சி, பூண்டு விழுது – 3 ஸ்பூன்
- தக்காளி – 3
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- மல்லி தூள் – 1 ஸ்பூன்
- புளி – 100 கிராம்
- உப்பு – தேவையான அளவு
குழம்பு தாளிக்க
- கடுகு – 1 தேக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- வெந்தயம் – 1/2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 10
- பச்சை மிளகாய் – 2
- எண்ணெய் – தேவையான அளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
- மீனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். புளியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான வாணலியில் எண்ணெயய் ஊற்றிக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும் வெட்டி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் , தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- பின் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து 2 கொதி வந்தவுடன் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு தயார்.